திங்கள், 11 ஆகஸ்ட், 2025

அதிகாரத்தின் முகங்கள் - (கவிதை) கவிஞர் பூ.ஆசு

 அதிகாரத்தின் முகங்களைக் 

கவிதையின் முன் நிறுத்தி 

கேள்விக்கு உட்படுத்துதல்

 
                  

                          அதிகாரம் முகங்கள் என்ற கவிதையின் வழியாக கவிஞர் பூ.ஆசு அவர்கள், சமூகத்தில் அன்றாடம் நிகழக்கூடிய சமூக அநீதிகளையும், கொடுமைகளையும் நாம் செய்தியாகக் கண்டு கடந்துவிடக்கூடிய இன்றைய காலச்சூழலில் அதனை மிகவும் வலியுடனும், கவனத்துடனும் கவிதையாக மாற்றி, அந்த வலியை, நினைவை எப்படி உங்களால் மறக்க முடிகின்றது? என்று கவிதையின் வழியே தொடர்ந்து கேள்வியாக முன்வைக்கின்றார். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் நாம் பலவற்றையும் மறைந்து விடுகின்றோம். அல்லது நினைவு கூரத்தவறிவிடுகின்றோம் எனலாம். இத்தகைய நிலையில் தான் இந்த கவிதைப்பனுவலானது மிகுந்த கவனத்தையும், நம் அனைவரும் இதைப்படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் அறிய நூல் எனலாம். 

இதில் தலைவர்களின் சிலைஉடைப்பு, காவல் துறையில் நடக்கும் அடாவடிகோஷம் போடாவிட்டால் மதவாதம் செய்து படுகொலைச் செய்தல், வேங்கைவயல் ,தாய்மதம் இந்துமதம் திரும்பக்கூறிய சீமான் கருத்துகள், ஸ்ரீ மதி, கழிவு நீர் தொட்டி , விஷவாயு என தொடர்ந்து பலவற்றையும் கவனத்தில் கொண்டு  எழுதிவருகிறார். 

 

இனி 

சவக்குழி தோண்டச்

சொல்பவனைச்

சவ்வு கிழித்து

விட்டெறி

இல்லை

இடரெறினில்

தலை சீவித் தலைநிமிர்

 

என்ற கவிதையைப் படிக்கின்ற பொழுது ஆண்டாண்டுக் காலமாக அதிகாரத்தின்  ஆதிக்க அழுத்தத் தணலில் நிற்க நிர்ப்பந்திக்கப்படும் போதெல்லாம் அடங்க மறுக்கவும், அத்துமீறவும் இக்கவிதை நமக்கு துணை நிற்கும். ஒரு முறை தலைமிர்ந்து பார்! உன் தலைமுறையும் இனி தலைநிமிறும் என்பதை மிக அழுத்தமாகவே இக்கவிதைப் பதிவுசெய்கின்றது.

மிச்சமிருக்கும் ஆவணத்துடிப்பு என்ற கவிதையில் பாலியில் வன்புணர்வைப்பற்றி பேசுகிற பொழுது நம் தேசமெங்கும்  அழிக்கமுடியாத களைச்செடியாக, சீமைக்கருவேலமரமாக வளர்ந்து விட்டது. நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்பதை,

சீமைக்கருவேலஞ்

செடிபோல

நீண்டு நிறைந்து

நிற்கின்றன

பாலியல் வன்புணர்வுகள்.

 

டெல்லியில் உழவர்களின் புரட்சியை ஆதரித்து எழுதிய கவிதையில்….

 

அதிகாரக் கட்டமைப்பைத்

தகர்த்தியே நகருவோம்

சோறு போட்ட உன்னைச்

சோதிக்கும் எவனையும்

கூறுபோடுவோம்....      கூறுபோடுவோம்....

 

என உழவர்களின் பக்கமுள்ள நியாயத்தையும், அறத்தையும் மீட்க புரட்சியும், போராட்டமுமே தீர்வு என்கிறார் கவிஞர்.

ஆன்மீகத்தின் பெயரால் காடுகளையும், வளங்களையும் சுரண்டல் செய்யும் நபர்களை (சாமியார்களை) தோலுரிக்கவும், முகத்திரையை வெளிச்சமிட்டுக்காட்டவும்  மறக்கவில்லை கவிஞர். 


கவிதை முழுவதிலும் மாநில அரசு தொடங்கி, மத்திய அரசு (நடுவண் அரசு) அல்லது ஒன்றிய அரசின் அதிகார முகமாக இருந்தாலும் சரி எங்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அவ்விடத்தில்  கவிஞர் தம் அறச்சீற்றத்தை கவிதையாக வடித்து தர தவறவில்லை எனலாம். இந்நூலை வாசிக்கின்ற ஒவ்வொரு பொழுதும்  அதிகாரத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலிப்பதனை நாம் செவிக்கொண்டு கேட்கலாம். அது என்றைக்கும் நம் மனதை பிடித்து உலுக்கி, ஆட்டி  கேள்வியை கேட்கும் படி செய்தமையே கவிதையின் வெற்றி எனலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி   எழுதிய நூலினைப்படித்தேன். நூற்றுப்பதினொறு பக்க அளவில் அமைந்திருந்தது. அளவில் சிறிய நூல் வடிவம்...